பணியிட பாதுகாப்பிற்கு பயனுள்ள டிப்ஸ்கள் !


பாதுகாப்பு விதிகள் தோற்கும் இடங்களில் விபத்துக்கள் வெற்றி பெறுகின்றன என்பார்கள். கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை பாதுகாப்பு விதிகள்தான் நம்முடைய காக்கும் கடவுள். அவற்றை மதிக்காத போது நாமே வலிய விபத்திற்கு விருந்து வைக்கிறோம் என்று பொருள்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்கள் தொழில்முறைக் கட்டுநர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் ஏற்புடையவை. பாதுகாப்பில்லாத சூழ்நிலைகள் என்பவை யாவை?

1. நெரிசல் நிறைந்த பணிசெய்யும் இடங்கள்.
2. சரியான காற்றோட்டமோ அல்லது வெளிச்சமோ இல்லாமை.
3. சகிக்கமுடியாத அளவிற்கு சத்தம், ஈரத்தன்மை, குலுக்கல்கள் போன்றவை. 4. தீயணைப்பான்கள் இல்லாமலோ அல்லது செயல் இழந்த நிலையிலோ உள்ள இடங்கள்.
5. மின்சாரம் தொட்டால் பாயக்கூடிய நிலையில் மின் கம்பிகள்.
6. பாதுகாப்புத் தடுப்பில்லாத சுழலும் இயந்திரங்கள்.
7. மறிக்கப்படாத உள் திறந்த வெளிகள்.
8. பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.

இயந்திரங்கள் சம்பந்தமான விபத்துக்களைத் தவிர்க்க கீழ்க்கண்டவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

1.கிரேன் இயக்குபவர் தகுந்த உரிமம் பெற்றவராகவும், குறிப்பிட்டவேலைக்கு உகந்தவராகவும் இருக்கின்றாரா?
2. கிரேனின் ஆர்.சி. புத்தகம் மற்றும் பாதுகாப்பீடு நடைமுறையில் உள்ளதா?
3. சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றதா?
4. கிரேன் நகரும் தரை தளம் பலமாக உள்ளதா?
5. நகரும் தளப் பரப்பு வேலைக்குப் போதுமானதாக உள்ளதா?
6.நகரும் தரைப் பரப்பிற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? உரியவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
7.தயாரிப்பாளரின் பரிந்துரைப்படி இந்த கிரேன் மேற்படி பணிக்கு உகந்ததா? தேவைப்படும் நெம்புகோல் நீளத்திற்கு ஏற்ப பளுவைத் தூக்கவல்லதா? 8.கிரேன் இயக்குநருக்குப் பணி பற்றிய முழுவிபரம் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளாரா?
9.பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கிரேன் நகரும்விதம் மற்றும் பணிமுறைகள் தெரியுமா? பாதுகாப்பு நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளதா?
10.பணி நடைபெறும் இடத்தில் மூன்றாம் மனிதர்கள் நுழையா வண்ணம் அறிவிப்புகள் உள்ளதா? இவற்றையெல்லாம் நாம்
பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பொதுவாக, கட்டுமான புராஜெக்ட்களில் நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய சில பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் :
1. இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போது அதில் ஏதாவது பழுதினைப் பார்த்தல்.
2. மின்சாரம் பாயும் நிலையில் இருக்கும்போதே மின் பணிகளைச் செய்தல்.
3. இயந்திரத்தின் பாதுகாப்பிற்காக உள்ள இனங்களை இடையூறாக இருக்கிறது என கழட்டி வைத்துவிடுவது.
4. தனி மனிதர் பாதுகாப்புச் சாதனங்களை உபயோகிக்காமல் இருப்பது.
5. பாதுகாப்புச் சாதனங்களை செயலிழக்கச் செய்து வைத்திருப்பது.
6. மின்சாதனங்கள் பொருத்தும் பிளக் பூமியுடன் தொடர்பு கம்பி இல்லாதிருப்பது.

         அடுத்ததாக, ஒரு கட்டுமான புராஜெக்டில் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியான ஸ்கஃப் ஃபோல்டிங்கில் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு டிப்ஸ்கள்.

1. ஸ்கஃப் ஃபோல்டிங்கின் மொத்த எடையை விட 4 மடங்கு பாரம் தாங்கும் வகையிலான ஸ்கஃப் ஃபோல்டிங் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
2.நிலை நிறுத்தும் இடமும் திடமானதாக இருக்க வேண்டும். பேரல்கள், பெட்டிகள், தனித்தனி செங்கற்கள் அல்லது கான்கிரீட் பிளாக்குகள் போன்றவை ஸ்கஃப் ஃபோல்டிங்குகளுக்கு ஆதாரமாக நிறுத்தப்படக் கூடாது. 3. ஸ்கஃப் ஃபோல்டிங் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து நிபுணத்துவம் கொண்ட ஒரு மேற்பார்வையாளரின் முன்னால்தான் ஸ்கஃப் ஃபோல்டிங்கை, நிலை நிறுத்துவது, நகர்த்துவது, கழற்றி மாட்டுவது, இடமாற்றம் செய்வது போன்ற வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. ஸ்கஃப் ஃபோல்டிங் அமைப்பில் பாதுகாப்பு கட்டமைப்பு (Safety Flatform), மேலெழும் போதும், கீழிறங்கும் போதும் இடையில் பாதுகாப்புப் பிடி மற்றும் டோ போர்டு அமைப்பும் செய்யப்பட வேண்டும்.
5. ஸ்கஃப் ஃபோல்டிங்கின் தாங்கு உபகரணங்களான பிராக்கெட், பிரேசஸ், ட்ரஸ்சஸ்-ஸ்குரூலக்ஸ் மற்றும் ஏணிகள் நல்ல நிலையில் உள்ளனவா? என்பது நிர்மாணிக்கும் முன்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
6. கட்டிடப் பாதுகாப்பு பொறியாளர், கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் கண்காணித்து உரிய உயரதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
7. தொங்கு நிலையில் உள்ள ஸ்கஃப் ஃபோல்டிங்கின் பிடிப்பு நிலையினை கட்டுமானப் பணியின் ஒவ்வொரு ஷிஃப்டுக்கு முன்பும் உரிய அதிகாரி ஒருவரால் கண்காணிக்கப்பட வேண்டும்.
8. நார்கயிறு அல்லது சிந்தெடிக் கயிறு மூலம் தொங்கு ஸ்கஃப் ஃபோல்டிங் செயல்படுத்தப்படும் போது,சுற்றியுள்ள பகுதியில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
9. கிணற்று படிகள் மற்றும் ஏணிகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி ஸ்கஃப் ஃபோல்டிங் உருவாக்கப்படக் கூடாது.
10. மின் இணைப்பு உள்ள இடத்திலிருந்து 10 அடி தூரத்தில் மட்டுமே ஸ்கஃப் ஃபோல்டிங் அமைக்கப்பட வேண்டும். சில கட்டுமான வேலைகளில், மின் இணைப்புகளைக் கவனமாக செய்வதில்லை.
அதிலும் தற்காலிக வேலைகள் என்றால், அதைப் பொருட்படுத்துவதே கிடையாது. இதனால், மின்கசிவு ஏற்பட்டு, மின் விபத்து நடப்பதும் அதிகரிக்கிறது. மின்தாக்குதல் ஏற்பட்டால், அதற்கு உண்டான முதலுதவி சிகிச்சைப் பற்றிஅனைத்துத் தொழிலாளர்களுக்கும்
பயிற்சி அளிக்க வேண்டும்.
      மண் சரிவின்போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இரண்டு மீட்டருக்கு மேற்பட்ட பள்ளங்களை தோண்டும்போது மண் சரியாமல் இருக்க, உரிய தடுப்புப் பலகையை பொருத்தி விட வேண்டும்.

ஏமாற்று பில்டர்களுக்கு வந்தாச்சு வேட்டு !“


நான் இந்த பதவியில் இருந்து செல்வதற்குள் எப்படியாவது கட்டுமானத்துறையை கட்டுபடுத்தக் கூடிய ரியல் எஸ்டேட் மசோதா ஒன்றை இந்திய பாராளுமன்ற அரங்கில் தாக்கல் செய்யாமல் விடமாட்டேன்‘ என்று மூன்றரை ஆண்டு காலம் போராடியவர் வீட்டு வசதி துறையின் மத்திய காங்கிரஸ் அமைச்சர் திரு.அசோக் மெகான்.

(ஆனால் ரியல் எஸ்டேட் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அசோக் மெகான் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது வேறு விஷயம்.)

அதோ இதோ என்று சொல்லிக்கொண்டிருந்த இந்திய ரியல் எஸ்டேட் மசோதா ஒரு வழியாக 12.6.2013 அன்று ஒருமனதாக தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆதர்ஷ் குடியிருப்பு மோசடி, மும்பை தானே குடியிருப்பு விபத்து போன்ற விஷயங்கள்தான் இந்த ரியல் எஸ்டேட் மசோதாவை விரைந்து தாக்கல் செய்ய வைத்ததாக சொல்லப்படுகிறது. ரியல் எஸ்டேட் மசோதாஎன்பது ஏதோ நிலம் வாங்கும் புரோக்கர்களை கட்டுப்படுத்துவதும், சொத்து பரிமாற்றங்களை கண்காணிப்பதும்தான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது பெருமளவு கட்டுநர்களை கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

ரியல் எஸ்டேட் மோசடியை களைவது, வரி ஏய்ப்பு ஏற்படாமல் கண்காணிப்பது, ஆயிரம் ச.மீ. அல்லது 12 குடியிருப்புகளுக்கு மேல் உள்ள கட்டிடங்களை கட்டும் பில்டர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வலியுறுத்துவது, பொதுமக்களை ஏமாற்றும் பில்டர்களை தண்டிப்பது,
இடைத் தரகர்களை அகற்றுவது, விதிகளையும் சட்டங்களையும் மீறாத கட்டுமானங்களை உருவாக்குவது போன்ற பயனுள்ள அம்சங்களை அடக்கியதுதான் ரியல் எஸ்டேட் மசோதாவாகும்.

சென்ற ஆண்டு குளிர் கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட இருந்த இந்த மசோதா பல்வேறு விவாதங்களுக்கு பிறகு இந்த ஆண்டு ஓகே ஆகியிருக்கிறது. இந்த மசோதா எப்படி பலன் தரும் என

அகில இந்திய கட்டிட வல்லுநர் சங்கத்தின் BAI முன்னாள் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து கேட்டபோது:

“மோசடி என்பது கட்டுமானத்துறையில் மட்டுமல்ல. சிட் பண்ட் மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனிகள், தவணை முறையில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் போன்றவற்றில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது கட்டுமானத்துறையில் மோசடிகள் நடைபெறுவது மிகவும் குறைவு. அதுவும் எங்களைப் போன்று BAI மற்றும் ஃப்ளாட் புரமோட்டர்ஸ் அசோசியேஷனில் உறுப்பினராக இருப்பவர் எவரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது. எந்த சங்கங்களிலும் சேராத தன்னிச்சையான கயமைத் தன்மை மிக்க ஒன்றிரண்டு நபர்கள் தான் கட்டுமானத்துறையில் இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவற்றைத் தடுப்பதற்கென்றே பாராளுமன்றத்தில் ரியல் எஸ்டேட் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் இம்மசோதா நடைமுறைக்கு கொண்டுவரப்படும். புராஜெக்டகளை முடித்த பிறகு பில்டிங் கம்ப்ளீஷன் சர்டிபிகேட் வாங்க வேண்டும். விதிகளை மீறிய கட்டிடங்களை வரைமுறைபடுத்துவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டியின் பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன.

தற்போது நிலவி வரும் பொருளாதார தேக்க நிலையினால் 40 சதவிகித குடியிருப்பு புராஜெக்டுகளும், 60 சதவிகித வணிக வளாக புராஜெக்டுகளும் விற்பனையாகமால் இருக்கின்றன. அரசு வழிகாட்டு மதிப்பும் உயர்ந்துவிட்ட காரணத்தினால் குடியிருப்புகள் முழுமையாக விற்கமுடியாத நிலை உள்ளது. மேற்கண்ட மசோதாஅறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தால் கட்டுமானத்துறையில் உள்ள எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தேக்கநிலையில் உள்ள எல்லா குடியிருப்பு களும் விற்றுத் தீர்ந்துவிடும்” என்றார்.

FACEAT மாநிலத் தலைவர் பொறி . எஸ். ராஜேந்திரன் அவர்களை சந்தித்து இதுபற்றி கேட்டபோது: “கட்டுமானத் துறையில் நிரந்தரமாக காலூன்றி தொழில் செய்து வருபவர்கள் ஏமாற்று வேலைகளை செய்வதில்லை. இத்துறைக்குள் புதிதாக நுழைபவர்கள் உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் பிரமாண்டங்களை ஏற்படுத்தி பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பணத்தை கறந்து விடுகிறார்கள். இப்படிபட்டவர்கள் எல்லாவற்றிற்கும் துணிந்தவர்கள்; பின்னால் தனக்கு ஏற்படப்போகும் அவப்பெயர்களைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள்.

இது கட்டாயமாக கண்டிக்கப்பட வேண்டியது. மக்கள்தான் விழிப்புணர்வுடன் அவர்கள் உண்மையான பில்டர்களா, இதற்கு முன்னால் எத்தனை புராஜெக்டுகளை செய்து முடித்திருக்கிறார்கள், ஏதேனும் கட்டுமானத்துறை சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கின்றனரா? போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்ட பின்னரே புராஜெக்டுகளை வாங்க முன்வர வேண்டும்”. அரசு நிலங்களில் புராஜெக்டை ஆரம்பிக்கிறார்களே, அது எப்படி சாத்தியமாகும்? “தாங்கள் ஆரம்பிக்கப்போகும் புராஜெக்டுகளுக்கு அருகில் இருக்கும் திறந்த வெளியான அரசு நிலங்களை தங்களுடைய நிலங்களாகவே பாவித்து, தற்காலிகமான வேலிகளை அமைத்து, புராஜெக்டை சுற்றியுள்ள இடங்கள் தங்கள் வசம் உள்ளதுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்த்து குடியிருப்புகளை விற்றுவிடுகிறார்கள்.

பின்பு அப்படி அமைக்கப்பட்ட தற்காலிக வேலிகளை அகற்றி விடுகிறார்கள்”. விதிகளை மீறி கட்டிய ஃப்ளாட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல் விற்று விடுகிறார்கள். இதை எப்படி நிவர்த்தி செய்வது? “எந்த ஒரு புராஜெக்டாக இருந்தாலும் அதன் FSI விகித அளவுகளின்படிதான் கட்டவேண்டும் என்பது விதி. அதாவது பிரதான சாலை 100 அடியாக இருந்தால் 20 அடி அல்லது 25 அடி செட்பேக்கும், 60 அடியாக இருந்தால் 15 அடி செட்பேக்கும், 30 அடியாக இருந்தால் 10 அடி செட்பேக்கும் விட்டு கட்ட வேண்டும். தமிழகத்தில் புராஜெக்டுகளுக்கு ஏற்றாற்போல் FSI 1.5 விகிதம் அல்லது 1.75 விகிதத்தில்தான் கட்ட வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது.

       கட்டிடத்தின் உயரம் மேலே செல்லச் செல்ல மாடிப்படி, போர்டிகோ போன்ற பகுதிகளை சில நபர்கள் விதிகளை மீறி கட்டிடத்திற்கு வெளியே கட்டிவிடுகிறார்கள். நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் FSI 2 பங்கு விகிதத்தில்தான் கட்ட வேண்டும் என்று அரசு வகுத்திருக்கிறது. தமிழகத்தில் விதிகளை மீறி கட்டிடங்களைக் கட்டினாலும் நீதிமன்றங்களில் அதற்கான அபராத தொகையைக் கட்டி அனுமதி வாங்கிவிடலாம்”. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் புராஜெக்டுகளை முடிப்பதில்லை. இதனால் ஏற்படும் இழப்பை யார் பொறுப்பேற்று சரி செய்வது? “நேர்மையாக புராஜெக்டுகளை செய்து தரும் நிறுவனங்கள் இது போன்ற தவறுகளை செய்யாது. அனுபவமில்லாத, தொழிற்நுட்பத்தில் தேர்ச்சி பெறாத, பொறியாளர் அல்லாதவர்களைக் கொண்டு புராஜெக்ட் செய்ய முற்படும் புதிய நிறுவனங்கள்தான் இது போன்ற தவறுகளை செய்கின்றன.

       இது போன்ற நிறுவனங்கள்தான் இழப்பிற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்”.

புராஜெக்டுக்கான அனைத்து அப்ரூவல்களையும் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், சில பில்டர்கள் அப்ரூவல்கள் வாங்குவதற்கு முன்பாகவே மார்க்கெட்டிங் செய்து விடுகிறார்கள். இதை எப்படி நாம் அறிவது? எப்படி சரி செய்வது?

“புராஜெக்டுகளுக்கு அருகில் ரயில் நிலையம், விமானநிலையம், உள்வட்ட சாலை, வெளிவட்ட சாலை போன்ற வசதிகள் அமையவிருக்கின்றன, இந்த புராஜெக்டுதான் அந்த பகுதியின் மிகப் பெரிய லேண்ட்மார்க்காக அமையப்போகிறது என்று சொல்லி மக்களிடம் ஒரு செயற்கையான தேவையை உண்டாக்கி விடுகிறார்கள். மக்களும் ஆர்வக்கோளாரினால், தங்களுக்கும் பிரபலமாகப் போகும் அந்தப் பகுதியில் ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையினால் அப்ரூவல்களைக் பார்க்காமல் தவறு செய்கிறார்கள்.

           சில அனுபவமிக்க, தேர்ந்த பில்டர்கள்தான் இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள்தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்”. சமூக ஆர்வலர் திரு ஆர்.தன்ராஜ் அவர்களை கேட்டபோது: “வெகு நிச்சயமாக ஏமாற்றும் பில்டர்களுக்கு இது ஒரு வேட்டு. எப்படி என சொல்வதற்கு முன்பு. ஒரு உண்மை சம்பவத்தை கூறுகிறேன்.

      எனது நண்பர் திரு.கண்ணபிரான் மைலாப்பூரில் உள்ள கட்டுநர் மற்றும் கான்ட்ராக்டர் ஆகிய ஒருவரிடம் தனது பழைய வீட்டை சீரமைக்க கூறியிருந்தார். நேரில் வந்து பார்த்த அந்த கான்ட்ராக்டர் எஸ்டிமேஷன் தொகையாக 13.5 லட்ச ரூபாயை சொல்லியிருக்கிறார். நண்பர் 10 லட்ச ரூபாயை முதல் தவணையாக தந்திருக்கிறார். ஆனால் 4 லட்ச ரூபாய் அளவிற்குதான் வேலை நடந்திருக்கிறது. மீதிப் பணத்தை தனது சொந்த புராஜெக்டில் முதலீடு செய்துவிட்டார் கட்டுநர். பிறகு, மீதி 3.5 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் வேலை செய்ய முடியுமென கறாராக சொல்லிவிட்டார் கட்டுநர். அக்ரிமெண்டில் நாம் அப்படி சொல்லவில்லை என்றதும், அக்ரிமெண்டையே வாங்கி கிழித்து போட்டுவிட்டார் அந்த அடாவடி கட்டுநர். காவல் நிலையம் சென்றும் பயன் இல்லை, நீங்களே பேசி தீர்த்துகொள்ளுங்கள் என்றிருக்கிறார்கள்.
நண்பர் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.

அவர் ஏதேனும் சங்கத்தில் உறுப்பினராக இருந்திருந்தால் அங்கு புகார் தெரிவிக்கலாம் என்றால் அந்த ஏமாற்று பேர்வழி எந்த சங்கத்திலுமே உறுப்பினராக இல்லை. ஆனால் ,இந்த மசோதா தாக்கல் செய்த பிறகு எல்லாவகை கட்டுநர்கள், கான்ட்ராக்டர்களுமே பதிவு செய்தாக வேண்டும்.

        இதுபோன்று ஏமாற்ற முயன்றால் கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறைக்கு தள்ளலாம். இது மட்டுமல்ல. பிளாட் புரமோட்டர் ஒருவர் ஜாயின்ட் வென்சரில் புராஜெக்ட்டை தொடங்கினார். அந்த நிலம் மூன்று பேருக்கு சொந்தமானது. அதில் இருவரிடம் இருந்து மட்டுமே ஒப்புதல் வாங்கி வேலையை தொடங்கினார். ‘பூமி பூஜை டுடே’ என்று விளம்பரம் கொடுத்து அஸ்திவாரம் போடுவதற்குள்ளாகவே புக்கிங் செய்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால் பிளான் அப்ரூவல் கூட அவர் வாங்கியிருக்கவில்லை. சில மாதங்களில் நிலத்தின் மூன்றாவது சொந்தக்காரர் பிரச்சனை எழுப்பவே வாடிக்கையாளர்களுக்கு வங்கியை கை காட்டி விட்டு அந்த ஆள் பணத்தோடு எஸ்கேப் ஆகிகிட்டார்.

       இதுபோன்ற ஒன்றிரண்டு ஆட்களால் நல்ல கட்டுநர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. ஆகவே நாம் இந்த மசோதாவை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும்” என்றார் திரு. தன்ராஜ். கூடிய சீக்கிரம் சட்டமாக மாற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கும் இந்த ரியல் எஸ்டேட் மசோதா கட்டுமானத்துறைக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புவோம்.

எலெக்ட்ஷியன் டிப்ஸ்கள் !


மின்சாரம் இன்றி உலகில் எந்த தொழிலும் இருக்க முடியாது. மின்சாரத்திற்கு மாற்றாக வேறு எந்த புதிய சக்தி வந்தாலும், இதே ஒயரிங், ஸ்விட்ச் பாக்ஸ், மெயின் சப்ளை போன்றவை மாறாது. ஆக, எலெக்ட்ரீசியன் பணியின்றி எதுவுமே நடக்காது,சிறக்காது. அதே சமயம், இந்தப்பணி உயிரோடு விளையாடுவது ஆகும்.

உங்கள் உயிர் மட்டுமல்லாமல் மற்றவர்களின் உயிர்களோடும் கூடத்தான். எத்தனை ரிஸ்க் இருந்தாலும் இந்த தொழிலைப் பலரும் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் இதில் வரக்கூடிய வருமானம்தான்.

மின் பணியாளர்கள் எனப்படும் எலெக்ட்ஷியன்களுக்கு உபயோகமான டிப்ஸ்களை இங்கே காண்போம்.
1. பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் விழிப்பாக இருங்கள். பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடியுங்கள்.
2. அவசரத் தேவைகளுக்கு மருத்துவர்களைத் தேடுவதைப் போலவேதான் உங்களையும் தேடுவார்கள். எனவே. உங்களிடம் இரு சக்கர வாகனமாவது இருந்தாக வேண்டும்.
3. உங்களது முகவரி, அலைபேசி விவரங்களை உங்கள் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறீர்களா? அவர்கள் எந்நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடிப் போய்ச் செய்து கொடுப்பீர்களா?
4. எதையும் புதிதாக வாங்குவதை விட, இருப்பதையே கொஞ்சம் சரி செய்து போடுங்களேன் என்று சில வீட்டு உரிமையாளர்கள் சொல்வார்கள். ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள பழைய வயர்கள் முதலியவற்றை மாற்றியே ஆக வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
5. வீட்டுச்சொந்தக்காரர்கள் எவ்வளவு செலவில் வயரிங் வேலைகளை முடிக்க எண்ணுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவசியத் திற்கும். ஆடம்பரத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துங்கள்.
6. உங்களுடைய வேலைக்கு எப்படிக் கூலி கொடுக்கப்பட வேண்டும் என்பதை முதலிலேயே தெளிவாக்கிவிடுங்கள்.நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்னும் போக்கும் வேண்டாம்.
7. சிக்கனம் கருதி எங்களுக்கு இது போதும் என்று சில வீட்டுக்காரர்கள் சொல்வார்கள். இப்போதே செய்து வைத்துக் கொள்வதில் உள்ள நன்மைகளை அவர்களுக்கு விளக்குங்கள்.
8.எல்லா வேலைகளையும் நீங்களே செய்யப் போகிறீர்களா? வெளியில் கொடுத்துவாங்கப் போகிறீர்களா? அப்படி வாங்கும் வேலைகள் தரமானவையாக இருக்குமா? தீர்மானியுங்கள்.
9. உரிய உரிமங்கள், தகுதிகள் உள்ளவர்களையே உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள். கற்றுக் குட்டிகளால் தொல்லை வராத வகையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
10. தேவைப்படும் கருவிகளை நீங்களே சொந்த முதலீட்டில் வாங்கிக் கொள்வது வேலைகள் தடையில்லாமல் செய்யப்பட உதவும். விலை அதிகமான கருவிகள் என்றால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
11.ஒரு கட்டத்தில் நீங்களே வாடகைக்கு விடும் வகையில் அமைத்துக் கொள்ளலாம்.
12. உங்கள் தொழிலுக்கே உரிய மரியாதை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்குரிய உடைகளைத் தேர்வு செய்யுங்கள்.நீங்கள் அணியும் ஆடைகள் உங்கள் வேலைகளுக்கு இடையூறு செய்யாதவையாக இருக்க வேண்டும்.
13. உங்களது தொழிலுக்காக நீங்கள் எடுத்துச் செல்லும் பெட்டியில், தேவைப்படும் அனைத்தும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். போகிற இடத்தில் தேடிக் கொண்டிருக்கக் கூடாது.
14. சில நேரங்களில் இரவு, பகல் பாராமல் வேலையைத் தொடர வேண்டி வரலாம். இரவு நேரங்களில் அதிகப்படி எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்.தொடர்ந்து தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு வேலை செய்தால் உங்கள் அசதி மற்றும் கவனக் குறைவினால் விபத்துக்கள் நேரிட்டுவிடலாம். எச்சரிக்கை.
15. காலில் ஷூ, கைகளில் உறை இல்லாமல் வேலை செய்வதில்லை என்று கொள்கை வைத்துக் கொள்ளுங்கள்.
16. அலட்சியம் காரணமாகவே பல விபத்துக்கள் நிகழ்கின்றன. உங்களிடம் அந்த அலட்சியம் கூடவே கூடாது. இதில் நீங்கள் கண்டிப்புக் காட்டியே ஆக வேண்டும். முக்கியமாக மெயின்சுவிட்சை ஆன் செய்த நிலையிலேயே வைத்துக் கொண்டு உங்கள் வேலைகளைத் தொடர்வதைத் தவிர்க்க வேண்டும்.
17.வயரிங் வேலைகள் பல வகைப்பட்டவையாக ஆகிவிட்டன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட துறையில் நீங்கள் வல்லுநர் ஆக வழி காண வேண்டும்.
18. உதவியாளர்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். அவர்கள் செய்து வைத்த வேலைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சோதியுங்கள்.அரைகுறை ஆட்களை உதவிக்கு வைத்துக்கொள்ளாதீர்கள். அசட்டுப் பேர்வழிகளால் மற்றவர்களுக்கும் ஆபத்து வந்துவிடும்.
19. ஒப்பந்த வேலைகளை முடித்த பின்னும் வெகு காலத்திற்குப் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள் இருப்பார்கள். அத்தகையவர்களிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு பகுதி பகுதியாக முடித்துக் கொடுக்க வேண்டும். 20. கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகளுக்கான கூலியைக் காசோலை வழியாகப் பெற்று கணக்கில் வரவு வையுங்கள்.
21. உங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்கள் பெரிய அளவில் அமைந்தால் அப்போது உங்களது வங்கிக் கணக்கின்வரவு செலவு விவரங்கள்தான் உங்களுக்கு மிகப் பெரிய சிபாரிசாக அமையும்.
22. ஒப்பந்த வேலைகளுக்குக் காப்புத் தொகை கட்ட வேண்டி இருக்கும். உரிமங்களுக்கும் செலவாகும். இதற்கெல்லாம் யாரையும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்காமல் உங்களது சேமிப்பிலிருந்தே எடுத்துக் கொள்ள வழி செய்யுங்கள்.
23. உயிருக்கு ஆபத்துநேரும் தொழில் இது என்பதால் உங்களது உயிர் அருமைவாய்ந்தது. உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் பாதுகாப்பாக அமையும்விதத்தில் காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
24. கருவிகள் ஒரு கைப்படக் கையாளப்படுவது நல்லது. அடுத்தவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து வாங்கினாலும் கருவிகளைப் பற்றிய முழு அறிவு அவசியம்.
25. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்ளுங்கள். மின்சுற்றுக்களை முதலில் கம்ப்யூட்டரில் வரைந்து பார்த்துவிட்டுஅதற்குப் பிறகே கடைக்குப் போய் வாங்கி வரலாம். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
26. கமிஷன் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைவான பொருட்களை விற்கும் கடைகளை நாடாதீர்கள்.கடைக்காரர்களின் தூண்டிலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
27. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கருவிகள்,சாதனங்களின் பெயர்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். கூடுதலாக வேறு சில மொழிகளையும் கற்று வைத்துக் கொள்வதும் நல்லது.
28. விதிமுறைகளுக்குப் புறம்பாக எதையும் செய்யாதீர்கள். சிலர் மின்திருட்டை நியாயப்படுத்தி உங்களைத் துணைக்கு வரச் சொல்வார்கள். அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவாதீர்கள்.
29. நீங்கள் உங்கள் தொழிலில் கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்களை ஒரு பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது திருத்தங்களைச் செய்யுங்கள்.
30. நீங்கள் ஒரு குழுவாகச் செயல்பட முயற்சியுங்கள். உங்களது உதவியாளர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், ஒப்பந்தக்காரர்கள், கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என்கிற வட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
31. உங்களது வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் உங்களது தொடர்பு விவரங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
32. உங்களது வாடிக்கையாளர்கள் அவசரமாகஅழைக்க நேர்ந்து உங்களால் உடனடியாகப் போக முடியவில்லை என்றால் உண்மை நிலையைச் சொல்லுங்கள். சாக்குப் போக்குச் சொல்லவோ, புளுகவோ முயற்சிக்க வேண்டாம்.உங்களால் நேரடியாக ஒரு வேலையை மேற் கொள்ள முடியாத போது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வசதி செய்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களது நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.
33. இன்டீரியர் டெக்கரேஷனுக்கு உதவும் பல்வேறு விதமான லைட்டிங் மற்றும் ஃபிக்ஸர்ஸ்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அலுவலகங்கள் மட்டுமன்றி, வீடுகளுக்கும் லைட்டிங் ஸ்டைல்கள் வந்து விட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
34. ஃபால்ஸ் சீலிங்கைப் பிரித்து வேலை செய்வதை தற்போதுள்ள எலெக்ட்ரீஷியன்கள் கடினமான வேலையாக நினைத்துக் கொள்கிறார்கள். அது போன்ற வேலைகள் வந்தால் தவிர்க்கப் பார்க்கிறார்கள், அல்லது அதிகக் கூலி கேட்கிறார்கள். இதே தவறை நீங்களும் செய்யாதீர்கள்.
35. மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளைக் கட்டணம் செலுத்தியாகினும்
தவறாமல் சென்று பாருங்கள்.

கட்டுமானத்துறையில் லிஃப்டில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது எப்படி ?


உலகிலேயே விபத்துக்களை ஏற்படுத்தும் பல்வேறு துறைகளுள் சுரங்க தொழிலும், சாலை விபத்துக்களும், கட்டுமானத்துறையும் முதன்மையானது. அவற்றுள் கட்டுமானத்துறை விபத்துக்களை மட்டும் ஆராய்ந்தால், அவை பெரும்பாலும் பாரங்களை கையாள்வதால் ஏற்படும் விபத்துக்களே ஆகும்.

அதிலும் குறிப்பாக கட்டிட பொருட்களை அடுத்தடுத்த தளங்களுக்கு கொண்டு செல்லும் மின் தூக்கிகள் ஏற்படுத்தும் விபத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கட்டிடப் பணித்தளங்களில் லிஃப்டுகள் எனப்படும் பளு தூக்கிகளால் ஏற்படும் விபத்துக்கான காரணங்களும் தடுக்கும் முறைகளும்:
 விபத்துக்கள் நடைபெறக் காரணங்கள்:
 தனி நபர்களின் தவறு
1. போதிய அனுபவமற்ற அல்லது திறமையற்ற ஆப்பரேட்டர்கள்
மூலம் லிப்டுகள் இயக்கப்படுதல்.
2. ஆப்பரேட்டருக்கு ஓய்வு அளிக்கப்படாமல் தொடர்ந்து கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்துதல்.
3. பொருட்களுக்கு மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ள பளுதூக்கி களில் பணியாளர்கள் பயணித்தல்.
4. பளு மேடையில் பொருட்களை சரியான நிலையில் வைக்காமல் அவசரகதியில் உயர்த்துதல்.
5. முட்டுகள், வலுவூட்டிக் கம்பிகள் போன்ற நீளமான பொருட்களை செங்குத்தாக நிறுத்தி சரியாக பிணைக்காமல் ஒன்றோ இரண்டோ பணியாளர்கள் பிடித்துக்கொண்டு தூக்குதல்/இறக்குதல்.
6. அளவுக்கதிகமான பளுக்களை ஏற்றுதல்.
7. அவசர கதியில் வேகமாக பளுமேடைகளை கீழிறக்குதல் மற்றும் திடீர் பிரேக் மூலம் நிறுத்துதல்.
8. லிஃப்டுகள் தளத்தை அடைந்து நிறுத்தப்படுமுன் தளத்துக்குத் தாவுதல்.
9. பணியாளர் தலைக்கவசம், பாதுகாப்பு பெல்ட் போன்ற உபகரணங்களை அணியாமை;மாறாக நீளமான, காற்றில் பறக்கக்கூடிய உடைகளை அணிந்துகொண்டு லிஃப்டில் பயணித்தல்.

இயந்திரக் கோளாறு

1. இந்திய தர நிர்ணய விதிகளை நிறைவு செய்யாத பளுதூக்கிகளைப் பயன்படுத்துதல்.
2. விலை மலிவாய் கிடைக்கும், தரமற்ற பாகங்களைக் கொண்ட, சரியாக வடிவமைக்கப்படாத, தானியங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாத பளுதூக்கிகளைப் பயன்படுத்துதல்.
3. சுற்றிலும் பாதுகாப்புக் கம்பித்தடைகள், கைப்பிடிகள், பிணைப்பு வளையங்கள் அற்ற பளு மேடைகளைப் பயன்படுத்துதல்.
4. இயந்திரங்களைச் சீராக பராமரிக்காமை.
5. பழுதுகள் உள்ள மற்றும் அடிக்கடி பிரச்சினைகள் கொடுக்கும் பளுதூக்கிகளை முழுமையாக பழுது நீக்காமல் தொடர்ந்து பயன்படுத்துதல்.
6. பளுதூக்கிகள் சரியாக நிறுவப்படாமை, பளுமேடையும் கட்டிட தளமும் சமமட்டத்தில் அமையாமை, பளுமேடைக்கும், கட்டிட தளத்திற்கும் அதிகமான இடைவெளி இருத்தல்.
7. பிற பணியாளர் மற்றும் பார்வையாளர்கள் லிஃப்டின் அருகே செல்லாதவாறு தடுப்பு வேலி அமைக்கப்படாமை.
8. லிஃப்டுகள் பழுதுபடுகையில் உரிய மெக்கானிக்குகளை அழைக்காமல், ஆப்பரேட்டரோ, பிற பணியாளர்களோ பழுதை நீக்கி இயக்க முயற்சித்தல்.
9. மின்கசிவு ஏற்படுதல்.
10. தேய்மான மிகுதியால் செயின், கயிறு போன்ற பாகங்கள் அறுதல்.

எதிர்பாரா நிகழ்வுகள்

1. காற்று, மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களால் லிஃப்டுகளின் தாங்கிகள் விழுதல்/இறங்குதல்/சரிதல்.
2. சுற்றுப்புற சார அமைப்புகள் சாய்தல்.
3. மின்தடை நீங்குகையில் இயந்திரங்களின் திடீர் இயக்கம்.
4. எரியும் பொருட்கள் தீப்பற்றுதல்.
5. வெடி விபத்துகள் மற்றும் வாயு கசிவு.

விபத்துக்களைத் தடுக்கும் முறைகள்

1. இந்திய தர நிர்ணய விதிகளைப் பூர்த்தி செய்யும் தரமான பளுதூக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
2. பளுதூக்கி தயாரிக்கும் நிறுவனத்தின் அனுபவம் மற்றும் திறமை படைத்த ஊழியர்கள் மூலம் பணித்தள தேவைகளுக்கேற்ப
லிஃப்டுகள் நிறுவப்பட வேண்டும்.
3. அங்கீகாரம்/லைசன்ஸ் பெற்ற நபர்களால் குறிப்பிட்ட கால இடைவெளியில் லிஃப்டுகள் ஆய்வு செய்யப்பட்டு, பாகங்களுக்குத் தேவையான கிரீஸ்/ஆயில் இடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
4. பழுதடைந்த பாகங்கள் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.
5. தகுதியும், அனுபவமும் உள்ள ஆப்பரேட்டர்கள் மூலம் மட்டுமே லிஃப்டுகள் இயக்கப்பட வேண்டும். 6. பளுக்களோடு பணியாளர்கள் லிஃப்டில் பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
7. லிஃப்ட் அமைந்துள்ள இடத்திற்கருகில் பிற பணியாளர்கள், சிறுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் செல்லாத வண்ணம் தடுப்புவேலி அமைக்கப்பட வேண்டும்.
8. பிணைக்கப்படாத செங்கல், ஓடுகள், கற்கள், மணல் போன்ற பளுக்கள், உரிய பெட்டிகள் அல்லது தள்ளு வண்டிகள் மூலம் மட்டுமே பளுமேடையில் ஏற்றப்பட வேண்டும்.
9. குறிப்பிட்ட/அனுமதிக்கப்பட்ட அளவுக்கதிகமான பொருட்களை ஏற்றக்கூடாது.
10. பணியாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாய் அணிய வேண்டும்.
11. புதிதாய் பணியில் சேருவோருக்கு பாதுகாப்பு முறைகள் பற்றிய விளக்கமும், அறிவுரைகளும் வழங்கப்பட வேண்டும்.
12. சாரங்கள், ஏணிகள், கயிறுகள், பெல்டுகள், செயின்கள், மின் ஒயர்கள்/கேபிள்கள் போன்றவை பழுதின்றி சரியாக உள்ளனவா என்பதை தினமும் பணிமேற்பார்வையாளர் மற்றும் பொறுப்பு பொறியாளர் கண்காணிக்க வேண்டும்.

எத்தனை தடவைதான் நாம் பாதுகாப்பு விதிகளை பட்டியலிட்டு கூறினாலும், அதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு கட்டுமான தொழிலாளர்களுக்கும், அவற்றை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கும் இருக்கிறது. இவர்களோடு கட்டுநர்களுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பாதுகாப்பு விதிகளைப் பற்றிய விழிப்புணர்வும் ஈடுபாடும் இருந்தால்தான் முற்றிலுமாக கட்டுமானத் துறையில் ஏற்படும்
விபத்துகளை தவிர்க்க முடியும்.

செய்வார்கள் என நம்புவோமாக.

பிளம்பிங் டிப்ஸ் !


பிளம்பிங் தொழில் என்பது கார்பென்டிங் தொழிலைப் போல வழி வழியாக வருவதல்ல. தாமாகவே முன் நின்று கற்றுக்கொள்வது அல்லது பிளம்பர்களிடம் உதவியாளராகப் பணி புரிந்து பிளம்பிங் தொழிலைக் கற்றுக் கொள்வது, இப்படித்தான் பிளம்பர்கள் உருவாகிறார்கள்.இன்று கட்டுமானத்துறையில் அதிக அளவு கூலி வாங்கக்கூடிய இந்தத் தொழிலில் முதலீடு என்பது அதிகமில்லை.

ஒரு பைப்ரின்ச்சும், ஸ்பேனரும், பிளம்பிங் தொழில் பற்றிய அறிவும் இருந்தால், மாதம் ரூ.20000/ க்குக் குறையாமல் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளது.

நேர்மையுடனும், திறமையுடனும் பணி புரிந்தால், இது என்றைக்கும் லாபத்தைத் தரக்கூடிய பணியாகும். இந்தத் தொழிலில் நன்கு சிறக்க இதோ டிப்ஸ்கள்:

 1. எந்த வேலைக்கும் அநியாயக் கூலி வாங்காதீர்கள். வாடிக்கையாளரின் அவசரத்தைப் புரிந்துகொண்டு அதிக கூலியைச் சொல்லாதீர்கள். நமது தொழிலின் ஆயுட்காலம் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. வாழ்வாங்கு வாழ வேண்டுமெனில், நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப் போனால் மிகச் சிறிய வேலைகளுக்கு பணம் வாங்க மறுத்து விடுங்கள். இதன் பலனாக, அந்த வாடிக்கையாளர் வாயிலாக பெரிய வேலைகள் கிடைக்கும்.

 2. ‘நான் வந்து விட்டாலே ரூ.300/ கொடுத்துவிட வேண்டும்’ என்றெல்லாம் போனிலேயே மிரட்டாதீர்கள். வருகை தந்தாலே பணம் பெற்றுவிட வேண்டும் என சொல்வதற்கு நாம் ஒன்றும் திறப்பு விழாவிற்குச் செல்லும் சினிமா நடிகை இல்லையே! அழைப்பு வந்தால் செல்லுங்கள். என்ன செலவாகும் என்பதையும், உங்கள் கூலி என்ன என்பதையும் நிதானமாகக் கணக்கிட்டுச் சொல்லுங்கள். 

3. கூலி விஷயத்தில் ஒருபோதும் பேரம் பேசாதீர்கள். ரூ.800/ சொல்லி விட்டு, ரூ.500/ க்கு ஓகே சொல்லாதீர்கள். முதலிலேயே ரூ.500/ சொல்லிவிடுங்கள். அதிலேயே உறுதியாக இருங்கள். இந்த உறுதி உங்களது வேலையின் தரத்தைப் பறை சாற்றுவதாக அமையும்.

 4. எந்த வேலைக்கு அழைக்கிறார்களோ, அந்த வேலைக்கான உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள். அடுத்து, அதே வாடிக்கையாளர் இன்னொரு வேலை சொன்னாலோ அல்லது வேறு வேலை புதிதாக வந்தாலோ, நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

 5. பிளம்பர்களுக்கென்றே இருக்கும் அழுக்கான பேண்ட், பனியன் அணிந்து கொண்டு செல்லாதீர்கள். நாகரீகமாக உடை அணியுங்கள். நாகரீகமாகப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.நீல நிறத்தில் சீருடை அணிந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பு.

 6. நாளுக்கு நாள் அறிமுகமாகும் நவீன பிளம்பிங் தொழிற்நுட்பங்களை இணையதளம், பத்திரிகைகள், நண்பர்கள் வாயிலாக தெரிந்து கொள்ள மறந்து விடாதீர்கள்.

 7. ஓய்வாக இருக்கும் நாளில் பிளம்பிங் தொடர்பான ஏ டூ இசட் ஷோரூம் கடைகளுக்குச் சென்று, அதன் ‘ஸ்பெசிபிகேஷன்ஸ்’, ‘ஃபீச்சர்ஸ்’, செயல்முறை மற்றும் விலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 8. நிறைய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு எப்போதும் வேலைகளைப் பெற்றுத் தரும்.

 9. எத்தனை பிசியாக இருந்தாலும், வருகிற வேலையை மறுக்காதீர்கள், தள்ளிப் போடாதீர்கள். வேறு வழியே இல்லை எனும்போது வாடிக்கையாளரிடம் உங்கள் நிலையை எடுத்துரையுங்கள். வேறொரு தேதியும், நேரமும் கேளுங்கள். அதுவும் தவறினால், வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளரைக் காக்க வைக்காதீர்கள், வாக்கு தவறாதீர்கள்.

 10. பி.வி.சி. பைப்புகள், பசை போன்ற பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உடைத்தும், சிந்தியும் விடாதீர்கள். நட்டத்தை ஏற்படுத்துகிற தொழிலாளியாக நாம் இருந்தால், வாடிக்கையாளர் மட்டுமல்ல, நாமே நம்மை விரும்ப மாட்டோம்.

 11. துல்லியம், பெர்ஃபக்ஷன், இவைதான் பிளம்பிங் தொழிலுக்கு ஆதாரம். இதில் அலட்சியம் என்பதே இருக்கக்கூடாது. இல்லையெனில், நீங்கள் குழாயைப் பொருத்திவிட்டு வருவீர்கள், தெரு முனைக்குக் கூடச் சென்றிருக்க மாட்டீர்கள். உடனே, குழாயிலிருந்து தண்ணீர் லீக்காகிக் கொண்டிருக்கும்.

 12. வாடிக்கையாளர் புகார் என்றால் புதிய வேலை என்கிற அதே ஆர்வத்தோடு சென்று போய் பாருங்கள். பழுதினைச் சரி செய்யுங்கள்.

 13. ஒரு வேலை என அழைத்து, ஒவ்வொரு வேலையாகச் சொல்லிக் கொண்டிருந்தால், எரிச்சல் அடையாதீர்கள். அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள். அதற்குத்தானே நாம் இருக்கிறோம்.

 14. வேலை முடிந்த பிறகு பணியிடத்தை சுத்தம் செய்து விடுங்கள்.

 15. ஹார்டுவேர் கடைக்காரரிடம் அன்டர்ஸ்டான்டிங்குடன் நடந்து கொள்வது, பில்லினை ஏற்றிப்போடுவது போன்ற சராசரி பிளம்பர் வேலைகளை நீங்களும் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.

 16. வாடிக்கையாளர் எளிதில் அணுகக் கூடியவராக நீங்கள் இருங்கள்.

 17. பிளம்பிங் என்றாலே தண்ணீர் சார்ந்த வேலைதானே? எனவே, வாட்டர் ஹீட்டர், வாட்டர் கூலர் போன்ற உபகரணங்களின் பழுது மற்றும் பராமரிப்பு வேலைகளையும் கற்று வைத்துக் கொள்ளுங்கள்.

 18. குடிநீர், கழிவுநீர் சார்ந்த பிளம்பிங் பணிகள் மட்டும் அல்லாது, நீச்சல்குளம் போன்ற கூடுதல் பிளம்பிங் நுணுக்கங்களையும் கற்று வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நிறைய வாய்ப்புகளையும், வருமானத்தையும் ஈட்டித் தரும்.


தமிழக கட்டுமானத்துறையில் போலி பொறியாளர்கள் !


எல்லா தரமான பொருட்களுக்குமே அதன் முதல் எதிரி அதே பெயரில் வெளியாகும் போலி தயாரிப்புகள்தான். எலெக்ட்ரானிக் சாதனங்கள், மின்னணு கருவிகள், உதிரி பாகங்கள், மருந்து மாத்திரைகள் தொடங்கி தண்ணீர் பாக்கெட் வரை நம் நாட்டில் போலிகளின் ராஜ்ஜியமே மேலோங்கி நிற்கிறது. போலி மருத்துவர்கள், போலி வக்கீல்கள், இவர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.

அதே போன்று, போலி சிவில் இன்ஜினியர்களும் உருவாகத் துவங்கி தற்போது நமது கட்டுமானத்துறையில் ஏறத்தாழ 40 சதவிகிதம் போலி இன்ஜினியர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பது வெளியே வராத செய்தி.

 தரமற்ற கட்டுமானங்களை உருவாக்கி, சிவில் பொறியியலுக்கு களங்கத்தைக் கற்பிக்கும் இந்த போலி பொறியாளர்கள் எவ்வாறு உருவாகிறார்கள்? எப்படி கட்டுமானத்துறையில் ஊடுறுவுகிறார்கள்? என தமிழகம் மற்றும் புதுவை கட்டிட பொறியாளர் சங்க கூட்டமைப்பின் (FACEAT) புதிய தலைவராக நியமனம் பெற்றிருக்கும் பொறி . எஸ். ராஜேந்திரன் அவர்களைக் கேட்டோம்.

 “பொறியியல் கல்வி படித்திராதவர்கள், அக்கல்வியை இடைநிறுத்தம் செய்தவர்கள், வேறுதுறை படித்தவர்கள், கைவசம் கொஞ்சம் பணத்தை வைத்திருப்பவர்கள், குறுகிய காலத்தில் கட்டுமானத்துறையில் பன்மடங்கு லாபம் பெற்று விடலாம் என்கிற எண்ணத்தில் இத்துறையில் நுழைகிறார்கள். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் ஒரு கட்டுமான புராஜெக்டை மட்டும் கட்டிவிட்டு, பல கட்டுமான புராஜெக்டுகளை முடித்திருக்கிறேன் என்று பொய்யான தகவல்களைக் கூறி கட்டுமானப் பணிகளை புதிதாக பெற்றுவிடுகிறார்கள்.

 இத்துறையில் 40 சதவிகிதத்திற்கு மேற்பட்ட போலி பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. பல லட்சம் அல்லது பல கோடி முதலீடு செய்து கட்டப்படும் கட்டுமானங்களை அத்துறையில் முறையாக தேர்ச்சி பெற்ற ஒரு பொறியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற அடிப்படை சிந்தனை பொதுமக்களிடையே இல்லை. இது ஒரு கட்டிடம்தானே என்று அலட்சியமாக நினைத்து கட்டிடப் பணிகளை ஒரு சாதாரண மேஸ்திரியிடமோ அல்லது குறைந்த அனுபவமே உள்ள ஒரு போலி பொறியாளரிடமோ ஒப்படைத்து விடுகிறார்கள்.

 இது போன்ற போலி பொறியாளர்களிடமோ, மேஸ்திரியிடமோ கட்டுமானப்பணிகளை ஒப்படைத்தால், அவர்களால் கட்டப்படும் கட்டுமானங்கள் குறுகிய காலத்தில் சிதிலமடைந்து பாழாகிவிடும். நீண்ட ஆயுள் கொண்டு நிலைபெற்ற கட்டிடங்களாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஏனெனில், மண் பரிசோதனை, நிலத்தடி நீர் பரிசோதனை, அஸ்திவாரப் பணிகளில் கலவை முறைகள், அதற்குண்டான சரியான விகிதங்கள், எந்த வகையான மண்ணுக்கு எந்த வகையான அடித்தளம் அமைப்பது போன்ற முதற்கட்டப் பணிகளை முறைப்படி செய்யமாட்டார்கள்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே முறையையே எல்லா கட்டுமானங்களிலும் பயன்படுத்து வார்கள். அடுத்தகட்ட பணிகளான காலம், பில்லர், கான்கிரீட் தளம், சென்ட்ரிங் ஒர்க் போன்ற பணிகளுக்கு எந்த அளவில் கம்பிகளை வாங்க வேண்டும்? எப்படி பொருத்த வேண்டும்? ஒவ்வொரு ஜங்ஷனிலும் எந்த அளவுள்ள கம்பிகளை இணைக்க வேண்டும்? எந்த வகையான ஸ்டான்டர்ட் கம்பிகளை பயன்படுத்த வேண்டும்? போன்ற விவரங்களை ஒரு பொறியியல் படித்த, அனுபவம் மிக்க இன்ஜினியரால் மட்டுமே செயல்படுத்த முடியும். அவ்வாறில்லாமல், போலி பொறியாளரைக் கொண்டு அப்பணிகளை முடித்தால் இழப்பு பொதுமக்களாகிய நம் அனைவருக்கும்தான். கடைசிக்கட்ட பணிகளான எலெக்ட்ரிகல், பிளம்பிங், மரவேலைகள், பூச்சுவேலைகள், தரைகள் அமைத்தல், பெயிண்டிங் போன்றவற்றை ஒரு பொறியாளரின் மேற்பார்வையில்தான் செய்ய வேண்டும்.

அவ்வாறில்லாமல் போலி பொறியாளர்களின் மேற்பார்வையில் இப்பணிகளை செய்து முடித்தால் அக்கட்டிடம் முழுமை பெறாத கட்டிடமாகத்தான் இருக்கும். அகில இந்திய அளவில் மருத்துவ கவுன்சில் உள்ளது போல பொறியாளர் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்திவிட்டால், இத்துறையில் போலி பொறியாளர்கள் நுழைய முடியாது. எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையும்போதே அவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரி பார்த்து போலி பொறியாளர்களை புறக்கணித்து விடுவோம். அது மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் முழுமையாக போலி பொறியாளர்களை இனம் கண்டு விரட்ட முடியும்.

       ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஒரு பொறியாளரை அணுகும்போது, அவர் கட்டிடவியல் படித்து தேறியவரா? அவரால் முடிக்கப்பட்ட புராஜெக்டுகள் எத்தனை? அவற்றின் தரம், அவர் கட்டுமானத்துறை சம்பந்தப்பட்ட சங்கங்களில் உறுப்பினராக உள்ளாரா? போன்ற விவரங்களை விசாரித்து அறிந்த பின்னரே அவரிடம் கட்டுமானப் பணியை ஒப்படைக்க வேண்டும். இது போன்ற விவரங்களை நாம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால், போலி பொறியாளர்கள் யார் என்று சுலபமாக கண்டறிந்து விரட்டி விடலாம்”. சிவில் பொறியாளர்கள் போதிய படிப்பை படித்திருந்தும் திறமையற்றவர்களாக இருப்பதற்கு என்ன காரணம்? “கல்வியை முடித்த பிறகு பிரபலமான கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பல்வேறு வகையான புராஜெக்டுகளில் அனுபவம் பெற்றவர்கள் திறமையான பொறியாளர்களாக இருக்கிறார்கள். சில சிவில் பொறியாளர்கள் கல்வியை கற்று முடித்தவுடன் அதே கல்லூரியில் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவர்கள் 60 சதவிகித பொறியியல் அறிவை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் மாணவர்களுக்கு சொல்லித்தருவதோ 40 சதவிகிதம்தான். அதிலும் மாணவர் கள் உட்கிரகிப்பது 20 சதவிகிதம் தான். கட்டுமானத்துறையில் வெளி இடங்களுக்குச் சென்று அத்துறையின் நுணுக்கங்களை அறிந்திராதவர்கள் எப்படி திறமையாக மாணவர்களுக்குக் கற்றுத் தர முடியும்? படிப்பறிவோடு கூடிய அனுபவ அறிவும் இருந்தால்தான் ஒரு சிவில் பொறியியல் மாணவர் எதிர்காலத்தில் திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளராகத் திகழ முடியும்” என்றார் பொறி. எஸ். ராஜேந்திரன்.

 சென்னை கட்டிடப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறி. லு. வெங்கடாசலம் அவர்களை கேட்டபோது:

      “பொறியாளர் இல்லாமல் கட்டிடம் கட்டுவது போலி மருத்துவரிடம் உடல்நலம் பற்றி கேட்பது போலாகும்.ஒரு கட்டிடம் கட்டுவதாக இருந்தால் ஒரு சிவில் பொறியாளரைக் கொண்டுதான் கட்ட வேண்டும்.கட்டிடம் கட்டினால் பொறியாளரைக் கொண்டுதான் கட்ட வேண்டும் என்கிற நம்பிக்கை மக்களிடையே இன்னும் வரவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை 60 சதவிகித மக்கள் மட்டும் தான் பொறியாளரைக் கொண்டு கட்டுகிறார்கள். இது மற்ற மாநிலங்களில் 75 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை பொறியாளரைக் கொண்டு கட்டிடப்பணிகள் நடைபெறுகின்றன.

     தமிழ்நாட்டில் இந்நிலை மாற வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன் வாடிக்கையாளர் பொறியாளருடன் தரமான பொருட்களைக் கொண்டுதான் கட்டவேண்டும் என்ற நிபந்தனையுடன், அதற்கான தோராய மதிப்பீடு, கட்டுமானம் முடியும் தருவாயில் எவ்வளவு கூடுதல் தொகை செலவாகும் என்பது போன்ற விவரங்களை, தெளிவாக, ஒளிவுமறைவின்றி முறையான ஒப்பந்தம் செய்து கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். போலி பொறியாளருக்கு அனுபவம் மட்டுமே போதாது. போலி பொறியாளரிடம் ஒரு காலம், பீம் என்ன எடையைத் தாங்கும் என்று கேட்டால் அதன் விபரம் தெரியாது. சிமெண்ட் விகிதம் கேட்டால் தெரியாது. தரம் பற்றி கேட்டால் தெரியாது. ஆனால், ஒரு படித்தறிந்த, அனுபவமிக்க ஒரு பொறியாளரிடம் கேட்டால் அவர் துல்லியமாக இவ்விவரங்களைத் தெரிவிப்பார். போலி டாக்டர்களை கண்டுபிடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் கட்டுமானங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் பதிவுசெய்யப்பட்ட கட்டிடப் பொறியாளரைக் கொண்டு கட்டப்படுகிறதா? என்று கண்காணிப்பதற்கு குழு ஒன்றை அமைத்து அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த ஒரு கட்டிடம் கட்டப்படும்போதும் பொறியாளரின் ஆலோசனைப்படிதான் கட்டுதல் வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்றார் பொறி. லு. வெங்கடாசலம். கட்டுமானத்துறையில் சிறிது காலம் அனுபவம் இருந்தாலே, தானும் ஒரு சிவில் பொறியாளர்தான் என்ற ரீதியில் உரிய சான்றிதழ்கள் இல்லாத, தரமில்லாத பல பொறியாளர்கள் உலவுவதற்கு கட்டுமானப் பொறியாளர்களின் பற்றாக்குறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

     ஆகவே, மாணவர்கள் அதிக அளவில் கட்டுமானத்துறையை தேர்ந்தெடுப்பதோடு, பொதுமக்களும் தரமான, உண்மையான பொறியாளரிடம் தனது கனவு இல்லத்தை ஒப்படைப்பது மூலம் போலி பொறியாளர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

எல்லா வகை கட்டுமானங்களுக்கும் ஏற்ற ஃ போம் கான்கிரிட் கற்கள் !


செங்கற்களின் பயன்பாடு குறைந்து ஃப்ளை ஆஷ் கற்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் மற்றும் ஒரு பசுமைக் கட்டிடப் பொருளாக கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் புதிய வரவுதான் ஃபோம் கான்கிரீட் (செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) மற்றும் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகள். இதனைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான டாம் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருள்குமார்அவர்களை சந்தித்து ஃபோம் கான்கிரீட்டை பற்றி கேட்ட போது

 “2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் ஜெர்மன் தொழிற்நுட்பத்தை தழுவி நம் நாட்டிற்கேற்றவாறு கீழ்க்கண்டவற்றை தயாரித்து அளிக்கிறோம். ஃபோம் கான்கிரீட் சொலூஷன்ஸ் ஃபோம் கான்கிரீட் மிக்ஸர் யூனிட். ஃபோம் ஜெனரேட்டர் ஃபோமிங் ஏஜெண்ட் ஃபோம் பிளாக் கட்டிங் மெஷின் ஸ்டீம் கியூரிங் சைலோ / கன்வேயர் ஃபோம் கான்கிரீட் பிரிக்ஸ் அதாவது, ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளைத் தயாரிக்கும் இயந்திரங்களையும், ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளையும் நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம்

 சிறிய அளவிலான பில்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளை மட்டும் வாங்க விரும்புவார்கள். நடுத்தர, பெரிய பில்டர்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளைக் கட்டும் மெகா பில்டர்கள் எங்களது ஃபோம் கான்கிரீட் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி அவர்களே சொந்தமாக கற்களை தயாரித்துக் கொள்வர்.

 அத்தகையோருக்கு கற்களைத் தயாரிக்கும் செயல் முறைகளை சொல்லித் தருவதோடு, தேவையான மூலப்பொருட்களையும் தருகிறோம். சந்தையில் உள்ள பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட்டின் பல சாதகமான அனுகூலங்களால் தற்போது ஃபோம் கான்கிரீட் இயந்திரத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது”.

 பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட் கற்களை பயன்படுத்தும்போது கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?

 “இத்தயாரிப்புகளை கட்டுமானத்தில் பயன்படுத்தும்போது பளு தாங்கும் திறன், வெப்பத்தைக் கடத்தா திறன் ((Thermal Insulation), ஒலியைக் கடத்தா திறன், தீயைக் கடத்தா(Fire Proof)திறன் போன்ற கூடுதல் சிறப்புகளைப் பெறுகிறது. அளவில் பெரியது. எடை குறைவானது. வேஸ்டேஜும் மிகக் குறைவாகும். மேலும், கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து விடலாம்.

கட்டு மானத்தின் மொத்த செலவுகளில் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை நிச்சயம் மிச்சப்படுத்தலாம். சந்தைக்கு வந்த புதிதில் மக்களிடையே மார்க்கெடிங் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டோம். . தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் நன்மைகளை அறிந்து, தாமகவே முன்வந்து பொறியாளர்கள் முதல் சிறு வாடிக்கையாளர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளிலும், ரெடிமேட் அளவுகளிலும் தயாரித்து வழங்கி வருகிறோம். கூரைகள் மீது வெப்பத்தை தாங்கும் வகையில் ‘தெர்மல் இன்சுலேஷன்’ கலவையை பூசுவதால் உள்ளே வெப்பம் புகுவது தடுக்கப்படும்.

சாதாரண கற்களில் சிமெண்ட், மணல், குவாரி டஸ்ட் போன்ற பொருட்கள் கொண்டு கலவை இருக்கும். அதன் அடர்த்தி அதிகம் என்பதால் ஒலி மற்றும் வெப்பத்தினை கடத்தும் தன்மை பெற்றிருக்கும். ஆனால் லைட் வெயிட் கான்கிரீட்டில் அடர்த்தி குறைவு. ஃபோம் கான்கிரீட் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எரிசாம்பல் (ஃபிளை ஆஷ்), சோயாபீன்ஸ் மற்றும் தாவர எண்ணெய்களிலிருந்து பெறப்படும் ஃபோம் மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுவே இந்தியகாலநிலைக்கு சிறந்தது. சராசரி பிரிக்ஸ்களைவிட எடை குறைவானது, வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கும். தனி வீடு புராஜெக்டுகளில் ரூஃப் கான்கிரீட்டாகவும் இதை பயன்படுத்தலாம்.

இரு பக்கங்களிலும் மோல்டுகளை வைத்துவிட்டு ஆட்டோஃபில்லிங் முறையில் கலவை ஊற்றப்படும்போது, கான்கிரீட், பீம்கள், காலம்கள் போன்ற எல்லாமே தயார். பிறகு இரண்டே நாட்களில் வீடுகள் தயார்.

பிரீகாஸ்ட் கட்டுமான முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இந்த வகை கற்களைக் கொண்டு கட்டுமானம் அமைத்து வருகிறார்கள். ஆனால், இந்திய சந்தைக்கு இந்த வகை கட்டுமானப் பொருட்கள் புதுசு.பொறியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த இயந்திரம் இயக்குவது பற்றி பயிற்சி அளிக்கிறோம்” .

 உங்கள் தயாரிப்புகளின் உத்திரவாதம் பற்றி ?

 “மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் கூடுத லான ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறோம்.ஏனெனில், மற்ற வகை கற்கள் நாட்கள் செல்ல செல்ல அதன் கடினத் தன்மை குறைந்து ஆயுள் குறையும். ஆனால், ஃபோம் கான்கிரீட் தயாரிப்புகள் அதற்கு மாறாக நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதன் கடினத்தன்மை கூடும். இயற்கைக்கு கேடில்லா பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் நீண்ட ஆண்டுகள் நீடிக்கும்”

 என்றார் திரு.அருள்குமார்.