பிபிசி கான்கிரீட் ! மே-2013


பெர்ஃபொரேட்டட் பிளாஸ்டிக் கான்கிரீட் (Perforated Plastic Concrete)என்பதைச் சுருக்கமாகப் பிபிசி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வகைக் கான்கிரீட் தயாரிப்பு சற்று வித்தியாசமானது. ஜல்லிகளை 1200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு உயர்த்த வேண்டும். இவ்வளவு சூடாக இருக்கும் ஜல்லிகளின் மேல் துருவப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்ட வேண்டும். சூடான ஜல்லியின் மேல் விழும் பிளாஸ்டிக் இளகும்,

 உருகும்.தொடர்ந்து ஜல்லிகளைக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஜல்லிக் கற்களின் மேற்புரத்தில் பிளாஸ்டிக் பிசின் மேல் ஒட்டிக் கொள்ளும். கற்களைப் பிசினில் தோய்த்து எடுத்த மாதிரியான ஒரு மேற்பூச்சு உருவாகும். இந்தக் கலவையைச் சுடச் சுட அச்சுக்களில் வார்த்துக் கட்டிகளாக மாற்றிவிட வேண்டும்.

அதன்பின் இந்தக் கட்டிகளைக் கட்டுமானத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். பஜ்ஜிக்கு வாழைக்காயை மாவில் தோய்த்து எடுப்பது போலவும் உதிரி பூந்தியை லட்டு பிடிப்பது போலவும் இந்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில் தயாரித்து எடுக்கப்படும் கட்டிகள் புதுமையான கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்த ஏற்றவையாக இருக்கின்றன. தீமை விளைவிக்குமா? பிளாஸ்டிக் உருகிக் கற்களின் மேல் படியும் போது , வெப்பத்தில் உருகும் நிகழ்வினால் தொந்தரவு தரக் கூடிய வாயுக்கள் கிளம்புமா? என்கிற சந்தேகம் வரக் கூடும். இது குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை.ஆபத்தான வாயு எதுவும் வெளியிடப்படுவதில்லைஎன்பதால் அச்சமில்லாமல் வேலை செய்யலாம்.

 மேலும், உருகிய பிளாஸ்டிக் குழம்பு நன்றாக இறுக்கிப் பிடிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இது கட்டுமானத்திற்கு உறுதி சேர்க்கிறது. மேற்புறத்தில் பன்மங்களால் பூசப்பட்ட கல் ஜல்லியை அடுத்தபடியாகத் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைப்பார்கள். இவ்வாறு 48 மணி நேரம் ஜல்லிகள் தண்ணீருக்குள் கிடக்கும். ஜல்லியின் மேல் உருகி ஒட்டிக் கொண்டிருக்கும் மேற்பூச்சானது உரிந்து வராமல் இறுக்கமாக ஒட்டிக் கொள்வதைக் காண இது வாய்ப்பை ஏற்படுத்தும். மேற்பரப்பில் பன்மப் பூச்சு முழுமையாக ஒட்டிக் கொண்டிருந்தாலும் கல் ஜல்லிகளுக்கும், இந்தப் பூச்சுப் படலத்திற்கும் நடுவில் பெரும் எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் உருவாகி இருக்கும்.

இந்த வெற்றிடங்கள் கட்டுமானம் சுவாசிப்பதற்கு உதவி செய்யும். தனக்குள் அதிக அளவு வெற்றுத் துளைகளைக் கொண்டுள்ள பிளாஸ்டிக் கலவைப் பூச்சு நல்ல உறுதியான பிடிமானமும் மூச்சு விடும் வசதியும் கொண்ட கட்டுமானத்தை உருவாக்க உதவி செய்கிறது.இந்த வகையில் தயாரிக்கப்பட்ட ஜல்லிகளைத் தாருடன் கலந்து பயன்படுத்தும் போது உருவாக்கப்படும் சாலைகள் உயர்ந்த தரமும், நீடித்த ஆயுளும் கொண்டவையாக விளங்குகின்றன.