மனதை திருடும் 3D மேஜிக் !



மிகவும் பழமையான கலைதான் ஓவியம். அதிலும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில் தரைகளிலும், சுவர்களிலும் வரையப்படும் ரசனையான ஓவியங்களுக்கு வரவேற்பு அதிகம். நாளடைவில் முப்பரிமாண ஓவியங்களாக உருமாறியதுதான் பெரிய திருப்புமுனை. அங்கு உருவாகும் அனைத்து வித குடியிருப்புகள், வணிகவளாகங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற கட்டிடங்களின் தரைகளில் திரும்பிய இடமெல்லாம் கலை உணர்வுமிக்க ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார்கள் உள்ளூர் ஓவியர்கள். குடியிருப்பு வாசிகளையும், வாடிக்கையாளர்களையும் மகிழ்விப்பதற்கு கட்டிட மற்றும் நிறுவனங்களின் சொந்தக்காரர்களே இது போன்ற ஓவியங்களை வரையச் செய்கிறார்கள்.

ஓவியங்கள் என்றால் எப்போதும் நாம் பார்த்து பழகிபோன இயற்கை கண்காட்சி, அழகியல் சார்ந்த ஓவியங்கள் அல்ல. திடீரென நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் சுறா, நடைபயிலும் சிங்கம், ராட்சத பாம்பு, பாதாள சுரங்கம் போன்ற பலவகையான தோற்ற மாயைகளை ஏற்படுத்தும் முப்பரிமாண ஓவியங்களே வரையப்படுகிறது. சிறுவர்களை மட்டுமன்றி  பெரியவர்களையும் இது பெரிதளவு ஈர்க்கிறது.
இங்குள்ள படங்களை பாருங்கள்எது ஓவியம், எது அசல் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு எத்தனை தத்ரூபமாக வரைந்திருக்கிறார்கள்.

   நமது நாட்டிலும் குடியிருப்பு புராஜெக்ட்டுகள் உருவாக்கப்படுகின்றன. சுற்றிலும் இடம்விட்டு நமது பில்டர்கள் கட்டுகிறார்கள். கார்டனிங், குழந்தைகள் பூங்கா, ஜாகிங் ட்ராக் என இதெல்லாம் தவறாது உருவாக்குகிறார்கள். கூடவே இது போன்ற ரசனையைத் தூண்டும் முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வைத்தால் அது வாடிக்கையாளரை பெருமளவு ஈர்க்கும் அல்லவா?