தானமைவு கான்கிரீட்டின் வரவேற்பு! மே-2013


முதல் வாரம் ஈ அடித்த தமிழ்படம் ஒன்று அடுத்த அடுத்த வாரங்களுக்கு சூப்பர் ஹிட்டாகி கல்லா கட்டுவது போன்ற கதைதான் எஸ்.சி.சி கான்கிரீட்டிற்கும். துவக்கத்தில் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படாத எஸ்.சி.சி கான்கிரீட் தற்போது கட்டுமானத் துறையின் அனைத்து பணிகளுக்கும், குஷூப்பாக தளம் அமைப்பு பணிகளுக்கு தோதான கான்கிரீட் என்ற பெயர் பெற்றுவிட்டது. எஸ்.சி.சி என்று சுருக்கமாக அழைக்கப்படுவது ஸெல்ஃப் கன்சாலி டேட்டிங் கான்கிரீட் ஆகும். இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இணையற்ற தொழிற்நுட்பம் இது என்று தாராளமாகச் சொல்லலாம். தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்ட உலக வர்த்தக மையம் மீண்டும் எழுந்து நிற்பது இந்த எஸ்சிசியின் புண்ணியத்தால்தான். இந்த எஸ்சிசியின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்தான். இதில் அப்படி என்ன விசேக்ஷம் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். நேர்த்தியான கலை வேலைப்பாடுகளை உலோகங்களில் எப்படி உருவாக்குகிறார்கள்? உலோகங்களைத் தண்ணீர் போல் உருக்குவார்கள்.அவற்றை அச்சுக்களில் வார்ப்பார்கள். உலோகம் அச்சுக்களுக்குள் புகுந்து ஓடி நிறைந்து இறுகிக் கெட்டியாகி வடிவம் பெறும். ஏறக்குறைய அதே போன்ற செயல்பாடுகளால் உருவாவதுதான் இந்த எஸ்.சி.சி. எப்படி வந்தது எஸ்.சி.சி? ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டு ஏகப்பட்ட காலம் ஆகிறது. இது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? என்கிற கதையே படு சுவாரசியமானதுதான். 1980களிலேயே இதனை ஜப்பானியர்கள் உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதற்குக் காரணம் மனித வளம். சரியாகச் சொன்னால் மனித வளப் பற்றாக்குறை. திறமை பெற்ற ஊழியர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாய்ப் போகவே ஜப்பானியர்கள் குறைந்த ஆட்களைக் கொண்டு மளமளவென்று வேலைகளை முடிப்பதற்காகக் கண்டுபிடித்ததுதான் இந்த ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட். கான்கிரீட் இடப்படும்போது கவனித்திருப்பீர்கள். கம்பிக் கட்டு மானத்திற்கு உள்ளே கான்கிரீட் சீராகப் பரவ வேண்டும். இதற்காக ஆட்களை வைத்து நீண்ட கம்பிகளால் குத்திக் குத்திக் கான்கிரீட்டைச் செலுத்துவார்கள்.இப்படிக் கான்கிரீட்டைப் பரவச் செய்வதற்கு அதிக அளவில் ஆள்பலம் தேவைப்பட்டது. அதற்கேற்ற வகையில் ஆட்கள் கிடைக்க வில்லை. வேலைகள் தேங்கி நின்றன. கம்பியால் குத்திவிடுவதற்குத் தேவையில்லாத விதத்தில் கான்கிரீட் தானே ஓடிப் பரவி நிரம்பினால் எப்படி இருக்கும்?இப்படி ஒரு கேள்விக்கான விடைதான் ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட். இதில் தண்ணீர் கசிந்து வெளியேறும் பிரச்சனை இல்லை. கான்கிரீட் உதிரியாகாது. மாறாக ஒருங்கிணைந்து உறுதியாகும். வலு அதிகமாகும். வேலை விரைவில் முடியும். காற்றுக் குமிழ்கள் தங்காது. வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நிற்காது. இத்தனை நன்மைகள் இந்த ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் உண்டு. அதனால்தான் இதற்கு அப்படியொரு வரவேற்பு. ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டினால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு.கான்கிரீட்டை இடும் வேலை வெகு எளிதாக முடிந்துவிடும். குறைந்த நேரமே போதும். ஆட்களும் குறைவான எண்ணிக்கையிலேயே தேவைப்படுவார்கள். செலவுகள் குறையும். ஆதாயம் அதிகரிக்கும். இவை எல்லாவற்றையும் விடக் கூடுதல் கவனத்தை ஈர்க்கும் விக்ஷயம் என்னவென்றால் இந்த வகைக் கான்கிரீட்டை இடுவதால் ஒலியினால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு அறவே இருக்காது. ஏன் தெரியுமா? இங்கு வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவது கிடையாது.வைப்ரேட்டர்களை இயக்குவதால் ஏற்படும் இரைச்சல் இருக்கவே இருக்காது. இதுவே பெரிய விஷயம் இல்லையா? எப்படிப் பாய்கிறது? ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் எப்படித் தானாகவே பாத்திகளில் தண்ணீர் பாய்வது மாதிரி பாய்ந்து நிரம்புகிறது? இதற்குக் காரணம் அத்துடன் கலக்கப்படும் வேதிப்பொருட்களும் இதர சேர்மானங்களும்தான். பாலிகார்பாக்சிலேட் பாலிமர்கள் என்று அழைக்கப்படும் பன்மங்களே இந்தச் சீரான பாய்ச்சலுக்குக் காரணமாக அமைகின்றன. கலவையின் பிசுபிசுப்புத் தன்மையை விரும்பிய அளவில் நிலைநிறுத்த உதவும் வேதிப் பொருட்களும் தகுந்த அளவில் கலக்கப்படுகின்றன.மேலும், தண்ணீருக்கும் சிமெண்டுக்குமான விகிதமும் எளிதான பாய்ச்சலை உறுதி செய்கிறது. பயன்படுத்தப்படும் சல்லிகளின் அளவும் நுட்ப மானதாக அமைய வேண்டும் என்பது இன்னொரு தேவை. இவற்றிற்கெல்லாம் பண அடிப்படையில் கணக்குப் பார்த்தால் கட்டுமானச் செலவு அதிகமாகத்தான் ஆகும் என்பது உண்மை. இந்தக் காரணத்திற் காகவே எல்லா இடங்களிலும் ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட் பயன்படுத்தப்படுவதில்லை.பணச் செலவு அதிகமாக ஆகுமானால் அந்தத் தொழிற்நுட்பத்தால் பலன் இல்லையே என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை.ஸெல்ஃப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டின் மற்ற நன்மைகளையும் கருத்திற் கொண்டால் இந்தச் செலவு நியாயமானதே. உயரமான கட்டடங்களைக் கட்ட வேண்டுமானால் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் அதிக வலுவுடன் உருவாக்கப்பட வேண்டும். கான்கிரீட்டின் இறுக்கம் சதுரஅங்குலத்திற்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்ட் அளவுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப் பார்கள்.உலகின் மிக உயர்ந்த கட்டடங்கள் பலவற்றை இந்த விதிக்கு உட்பட்டுத்தான் அமைப்பார்கள். இதனை மிஞ்சும் விதத்தில் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பவுண்ட் அளவிற்கு இறுக்கம் இருக்குமாறு அமைத்துத்தான் புதிய உலக வணிக வளாகத்தைக் கட்டுகிறார்கள். இது 102 மாடிகளைக் கொண்டதாக அமையும். கட்டடங்களின் உயரம் அதிகமாக ஆக இன்னொரு தொல்லையும் கூடவே வரும். அவ்வளவு உயரத்திற்குக் கான்கிரீட்டைப் பம்ப் செய்வது என்பது கடினமான காரியமாக இருக்கும். ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டில் அந்தத் தொல்லை இல்லை.உயரத்திற்குப் பம்ப் செய்யும் வேலையை வெகு எளிதாகச் செய்யலாம். தடங்கல் இருக்காது. ஸெல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்டின் வரவேற்பு கட்டுமானத்துறையில் ஒரு திருப்புமுனை என்று நிச்சயமாக சொல்லலாம்.