கலவையை ஊற்றும் போது கவனியுங்க !



கலவையைக் கலந்து , தேவைப்படும் இடத்தில், முறையாகக் கொட்டிப் பரப்புவதைக் கான்கிரீட்டை ஊற்றுதல் என்று சொல்லலாம்.கான்கிரீட் இடும் வேலை என்றும் குறிப்பிடலாம். இத்தகைய வேலைகளை மேற்கொள்வதற்கு முன்பாக, சோதிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன. இந்தக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றினால்தான் கான்கிரீட்டை ஊற்றும் வேலை முழுமை பெறும்.

கான்கிரீட் இடப்படுவதற்கு முன், இடப்பட வேண்டிய பகுதியை முழுமையாக ஆராய வேண்டும். பலகை அடைக்கும் வேலைகள் எந்த அளவுக்குச் செம்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும்.பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகியவற்றைச் சோதிக்க வேண்டும். செய்யப்பட உள்ள வேலையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைத்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்கும், ஒழுகி வீணாவதைத் தடுப்பதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பது முக்கியம்.

முட்டுக்கள் முறையான விதத்தில் பாரத்தைத் தாங்கக் கூடியவையா? சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றனவா?  இணைப்புகள் உறுதியாக உள்ளனவா? என்று சோதிக்க வேண்டும்.கான்கிரீட் வந்து சேர்ந்துவிட்டதா? அவசரம் வேண்டாம். கான்கிரீட்டைச் சோதியுங்கள். அது தரமாகத் தயாரிக்கப்பட் டிருக்கிறதா? சோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்தாலொழியக் கான்கிரீட் இடும் வேலைகளைத் துவக்க வேண்டாம்.

இதற்கு என்ன வழி? நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். ஜல்லிகளின் அளவை எப்போதாவது திடீரென்று சோதித்துப் பாருங்கள். கலவையில் சேர்க்கப்படும் சிமென்ட் தரமானது தானா? விரும்பிய கிரேடு கொண்டதா? தயாரிப்பு நிறுவனம் எப்படி?  சிமென்ட் எவ்வளவு வேகத்தில் இறுகுகிறது? உறுதி எப்படி? சோதித்துப் பார்க்க வேண்டும்.

கான்கிரீட்டில் கட்டிகள் இருக்கக் கூடாது. அப்போதுதான் பரவுவது சீராக இருக்கும். உயரமான இடங்களுக்குப் பம்ப் செய்வதாக இருந்தாலும் அந்த வேலை தடையில்லாமல் நடக்கும். கான்கிரீட்டுக்குள் எந்த அளவிற்குக் காற்று இடம் பெற்றிருக்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். கலவையின் வெப்ப நிலை என்ன? எப்போது இறுகும்? எவ்வளவு நேரத்தில் உறுதி பெறும்? சன்னத் தன்மை எப்படி? வலு எப்படி? ஆராய வேண்டும்.கான்கிரீட் ஊற்றப்பட்ட பிறகும் உங்களுக்கு வேலை இருக்கத்தான் செய்கிறது.எங்கே கான்கிரீட்டை இட்டீர்களோ அந்த இடத்தைக் கவனமாகச் சோதியுங்கள். வெடிப்புகள் உருவாகி இருக்கின்றவா என்று விழிப்பாகப் பாருங்கள். எங்காவது சில சில்லுகள் பெயர்ந்து விழுந்திருக்கின்றனவா என்று ஆராயுங்கள். தேன்கூடு வடிவிலான குறைபாடுகளையும் கவனிக்கத் தவற வேண்டாம். ஒவ்வொன்றையும் கவனமாகச் சோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் உற்றுப் பார்த்து குறைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். காற்று வெற்றிடங்கள் உருவாகி இருக்கலாம். கறைகள் படிந்திருக்கலாம். நிறம் மாறி இருக்கக் கூடும்.